கடந்த நூற்றாண்டினுடைய மிகப்பெரிய அவமானம் யாழ். நூலகத்தின் எரிப்புச் சம்பவம். தென்னிலங்கையில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று போராடும் அனைவரும் இந்த நிகழ்விற்கு இன்று வெட்கி தலைகுனிய வேண்டும் என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண பொதுநூலகம் எரியூட்டப்பட்டு 41 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பொதுநூலகத்தில் இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில், ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய சொத்தாக இருக்கக்கூடிய இந்த நூல் நிலையம் எரித்து அளிக்கப்பட்டு இன்றுடன் 41 வருடங்கள் ஆகின்றன. தென்னாசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக திகழ்ந்த இந்த நூலகம் இல்லாமல் எரிக்கப்பட்டது.
விலைமதிப்பற்ற எத்தனையோ புத்தகங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டன. தமிழ் மக்களின் சொத்தாக கருதப்படுவது கல்வி என்ற மூலதனம் மட்டும்தான். கல்வியை இல்லாமல் ஆக்கப்பட்டு தமிழ் மக்களை வீழ்த்தவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தச் சம்பவம் நடாத்தப்பட்டது.
இன்று நாடு எதிர்நோக்கி இருக்கின்ற பொருளாதார பிரச்சனைகளுக்கு காரணமான பல அத்திவார கற்கள் இந்த நூலக ஏரிப்பு ஒரு பிரதானமான அத்திவாரக்கல்லாக காணப்படுகிறது.
1981 ஆம் ஆண்டு அரசாங்க அனுசரணையுடன் எரித்தொழிக்கப்பட்டது. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு இதுதான் முதல் அத்திவார கல்லாக கருதுகிறோம்.
தென்னிலங்கையில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று போராடும் அனைவரும் இந்த நிகழ்விற்கு வெட்கி தலைகுனிய வேண்டும்.
கடந்த நூற்றாண்டினுடைய மிகப்பெரிய அவமானம் யாழ் நூலகத்தின் எரிப்புச் சம்பவம். இன்று போராடுகிறவர்கள் எரிப்புச் சம்பவத்தின் விளைவு, யுத்தத்துக்குள் தள்ளப்பட்டதன் விளைவு தான், நடு வீதியில் நிற்பதற்கு காரணம். இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இனவாதம் உள்ள ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்ற செய்தியை உலகத்திற்கு பறைசாற்றாமல், இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதனை உணர்ந்துகொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் இந்த அழிவுகளிலிருந்து மீண்டு வருகிறார்கள். இந்த நூலகத்தை புது பொலிவுடன் மிளிர செய்ய வேண்டும். உலகில் மிகச்சிறந்த நூலகமாக மாறுவதற்கு நாம் உறுதி பூண்டு, எதிர்காலத்தில் நாம் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும்.- என்றார்.
பிற செய்திகள்