
யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் கல்லூரி பழைய மாணவர்களின் அமைப்பால் எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி சனிக்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையில் இடம்பெறும் மோசமான யாப்பு மீறல்களைக் கண்டிக்கும் வகையிலும், கல்லூரியின் நிர்வாகத்திலே ஆளுநர் சபையின் தலைவர் மேற்கொண்டு வரும் முறையற்ற தலையீடுகளை எதிர்க்கும் வகையிலும், யாழ்ப்பாணக் கல்லூரி நிதிகளின் தர்மகர்த்தா சபைக்கு எதிராக ஆளுநர் சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தப் போராட்டம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு முன்பாக, தெல்லிப்பழை வீதியின் இரு மருங்கிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
போராட்டத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், சமய – சமூகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், கல்வியியளர்கள், சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்லூரிக்கு அருகில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நாடு முழுவதிலும் இருக்கும் யாழ்ப்பாணக் கல்லூரியின் நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.