
கொழும்பு, ஜூன் 2:
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றியக்குழுவில் (கோப்) எதிர்வரும் 7 ஆம் திகதி முன்னிலையாகுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதேநேரம், எதிர்வரும் எட்டாம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு மொரட்டுவ பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதுதவிர, எதிர்வரும் 9ஆம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு இலங்கை மின்சார சபைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 2018 மற்றும் 2019ஆம் வருடங்களுக்கான இலங்கை மின்சார சபையின் கணக்காய்வு அறிக்கை மற்றும் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்யப்படவுள்ளது.
இதேவேளை, நாட்டின் தற்போதைய உணவு நெருக்கடி தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 10ஆம் திகதி கோபா எனப்படும் அரச பொது கணக்குகள் பற்றியக்குழுவில் அதன் தலைவர் திஸ்ஸ வித்தாரனவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.