மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தக்கேணியின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தக்கேணியின் ஒரு பகுதியில் காணப்படும் நாணல்புல் பகுதியில் நேற்று மாலை தீ பரவல் சம்பவம் ஏற்பட்டது.
இதன் காரணமாக மட்டக்களப்பு நகர் முழுவதும் புகைபரவியதுடன் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினர் முன்னெடுத்தனர்.
இதன்போது தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன் தீர்த்தக்கேணியின் ஒரு பகுதியிலிருந்த நாணல்புல் தொகுதிகளும் அதிலிருந்த உயிரினங்களும் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீபரவல் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து இதுவரையில் தெரியவரவில்லை.
இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.