உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவும் – ஜனாதிபதி பணிப்புரை!

அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்குமாறும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் மூலம் சில வர்த்தகர்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் காட்டி விலையை அதிகரிக்க மேற்கொள்ளும் திட்டமிட்ட முயற்சிகளைத் தடுக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகள் எதிர்நோக்கும் சவால்களுக்கு விரைவான தீர்வு காண்பது தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மொத்த சந்தைக்கு விநியோகிக்கப்படும் விவசாய விளைபொருட்களில் ஒரு பகுதியை நேரடியாக கிராம சந்தைக்கு வழங்க வேண்டும் என்றும் இதன்போது முடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் போக்குவரத்துச் செலவு குறைவதோடு, கிராமப்புற நுகர்வோர் குறைந்த விலையில் பொருட்களை பெற்றுக்கொள்வதோடு, விவசாயிகள் அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கும் இயலும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்..

நியாயமற்ற விலையில் வர்த்தகம் செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களை செயற்படுத்துவதுடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை வர்த்தகர்களின் விருப்பத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்ய இடமளிக்காமல் கட்டுப்படுத்துவது தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *