3000 லீற்றர் டீசலை சூட்சுமமாக பதுக்கி வைத்திருந்த நபர் கைது!

அம்பாறை – அக்கரைப்பற்று – பட்டியடிப்பிட்டி பிரதேசத்தில் தேவைக்கு அதிகமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீற்றர் டீசல் அக்கரைப்பற்று பொலிசாரால் கைப்பற்றப்பட்டதுடன் சம்மந்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சூட்சுமமான முறையில் மூன்று நீர்த்தாங்கிகளில் சேகரிப்பட்டு வைத்திருந்த 3000 ஆயிரம் லீற்றர் டீசலே இவ்வாறு கைப்பற்றப்பட்டது.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் ஊழல் குற்றத்தடுப்பு பிரிவினர் பொலிஸ் புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைய இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக குறித்த டீசல் நிரப்பப்பட்ட நீர்த்தாங்கிகள் கைப்பற்றப்பட்டது.

அக்கரைப்பற்று திருக்கோவில் பிரிவிற்கு பொறுப்பாக உள்ள உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.எச்.செனவிரத்தினவின் மேற்பார்வையின் கீழ் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, எஸ்.எம்.சதாத்தின் பணிப்புரைக்கமைவாக பொலிஸ் நிலையத்தின் ஊழல் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் நூர்தீனின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த டீசலை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட டீசல் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *