21ஆவது திருத்தம்: இரட்டை குடியுரிமை விவகாரம் உள்ளிட்ட 4 விடயங்கள் குறித்து ஒருமித்த இணக்கப்பாடு!

21ஆவது திருத்தச் சட்டமூலத்தில் இரட்டை குடியுரிமை விவகாரம், பிரதமரை பதவி நீக்கும் விடயம், அமைச்சின் விடயதானங்கள், ஜனாதிபதி அமைச்சுப் பதவியை வகித்தல் உள்ளிட்ட நான்கு பிரதான விடயங்கள் குறித்து ஒருமித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய திருத்தங்களுடனான முழுமையாக திருத்தச்சட்டமூல வரைபு எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஓரிரு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் 21ஆவது திருத்தம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

பூரணமற்ற வகையில் இந்த திருத்தத்தை கொண்டு வராமல் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை உள்ளடக்கிய வகையில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அத்தோடு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் உள்ள அடிப்படை விடயங்கள் உள்வாங்கப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்றில் சமர்ப்பித்த 21ஆவது திருத்த யோசனை குறித்த உயர் நீதிமன்றின் தீர்ப்பினை கருத்திற்கொள்ளவும் யோசனை முன்வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *