கொரோனாவால் கணவர் உயிரிழப்பு.. 18 வது மாடியிலிருந்து 5 வயது மகளுடன் குதித்த மனைவியும் பலி

மலேசியாவில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வந்த கடலூர் மாவட்ட மென்பொறியாளர் கொரோனாவால் இறந்த நிலையில் அவரது மனைவியும் 5 வயது மகளும் 18 ஆவது மாடியிலிருந்து குதித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர் ரவிராஜா (40). மலேசியாவில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சத்யா பாய். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் இருந்தார்.

இவர்கள் மூவரும் கோலாலம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 18 ஆவது மாடியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் சாப்ட்வேர் என்ஜினியர்களாக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி ரவிராஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது மனைவிக்கும் 5 வயது குழந்தைக்கும் கடந்த 16ஆம் திகதி கொரோனா உறுதியானது. கடந்த 17 ஆம் திகதி கடும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த சத்யா பாய், தனது உறவினர்களை தொடர்பு கொண்டு தங்களை கவனித்து கொள்ள ஆள் இல்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

கணவர் உயிருக்கு போராடி வரும் நிலையில் தன்னை கவனித்து கொள்ள ஆள் இல்லாமல் கடும் மனஉளைச்சலில் இருந்த சத்யா பாய் தனது மகளுடன் 18 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் இருவரும் உயிரிழந்த நிலையில் ரவிராஜாவும் சனிக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனாவின் கோர பிடியில் சிக்கிய ரவிராஜாவின் குடும்பம் சிதறி போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது மூவரின் அஸ்தியை தங்களிடம் வழங்க வேண்டும் என ரவிராஜா, சத்யா குடும்பத்தினர் மத்திய மாநில அரசுகளிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *