
கொழும்பு,ஜுன் 04
ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரசாங்கம் மேலும் சுமையை ஏற்றியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
சாதாரண பொருட்களுக்கு வரி விதிப்பதை மன்னிக்க முடியாது என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.
ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெண்ணெய், பாலாடைக்கட்டி, சொக்லேட்டுகள், பழங்கள், அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றை ஆடம்பரப் பொருட்களாகக் கருதிய காலம் இன்று இல்லை என்றும் இவை சாதாரண பொருட்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
வரி விதிப்பு மூலம் அரசாங்கம் பாரிய வருமானத்தை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் நீக்கப்பட்ட அதே வரிகள் இந்த வாரமும் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் கணிசமான பாவனையிலுள்ள பொருட்களுக்கு அரசாங்கம் வரி விதிப்பதாகவும்,தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக வரி உயர்வுக்கு பதிலாக வரிச்சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொலைத்தொடர்பு வரியும் 15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் பெரும்பாலானவர்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த வரிகள் மூலம் திட்டமிட்டு வருமானம் ஈட்ட அரசாங்கம் முயன்று வருகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.