நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தனியார் போக்குவரத்து சேவையும் நாளை முதல் மட்டுப்படுத்தப்பட்ட சேவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதேவேளை அடுத்த டீசல் கப்பல் நாட்டை வந்தடையும் வரை மட்டுப்பாடு தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை எரிபொருள் விநியோகத்தில் தனியார் பேருந்து சேவைக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்தார்.
அத்துடன் எரிபொருள் விநியோகத்தில் அரச பேருந்து சேவைக்கு முன்னுரிமை வழங்குவதை போன்று தனியார் பேருந்துகளுக்கும் முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தினோம்.
இருப்பினும் இதுவரை சாதகமான தீர்வு கிடைக்கப்பெறவில்லை. கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையினை கருத்திற்கொண்டு கடந்த நாட்களில் சேவையில் ஈடுபட்டோம்.
ஒரு பயணத்திற்கு தேவையான டீசலை பெற்றுக்கொள்வது கூட தற்போது பெரும் போராட்டமாக உள்ளது. எனவே அடுத்த டீசல் கப்பல் நாட்டுக்கு வரும் வரை நாளை முதல் தனியார் பேருந்துபோக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்படும் எனவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சேவையாளர்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
அதேவேளை எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பேருந்து கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ள போதும் அது தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒரு தீர்வாக அமையாது. வாகனங்களின் உதிரிபாகங்களின் விலையேற்றத்திற்கமைய பேருந்து கட்டணம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.




