இலங்கைக்கு தொடர்ந்தும் அத்தியாவசியப் பொருட்கள்; தமிழக முதல்வர் அறிவிப்பு!

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலினை நேற்று காலை சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஒருவர் 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழக அரசாங்கத்தின் முதலமைச்சர் ஒருவரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

இலங்கைக்கும் இந்தியாவின் மாநிலங்களுக்கும் இடையிலான அதிக தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தின்கீழ் இலங்கையின் உயர்ஸ்தானிகர், தமிழக முதலமைச்சரை மரியாதை நிமித்தம் சந்தித்ததாக உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையை நிர்வகிப்பதற்காக, இலங்கைக்கு வழங்கிய இரண்டு பில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளுக்காக முதலமைச்சர் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், இலங்கையின் நிலைமை குறித்து தாம் அக்கறை கொள்வதாகவும், இதன் காரணமாகவே அத்தியாவசியப் பொருட்களின் முதல் கப்பலை உடனடியாக அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகவும் கூறினார்.

இரண்டாவது கப்பலில் பொருட்களை அனுப்ப உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் உயர்ஸ்தானிகரும், முதலமைச்சரும் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவுகள் மற்றும் கடற்றொழிலாளர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தனர்.

தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான பழமையான மற்றும் வலுவான இன, கலாசார மற்றும் மத தொடர்புகளை மீளாய்வு செய்து அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

இலங்கையில் பல்கலைக்கழகம் போன்ற பொருத்தமான வளாகத்தில், புகழ்பெற்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரின் சிலையை நிறுவ விருப்பம் வெளியிட்டார்.

முதலமைச்சரின் இந்த யோசனையை உயர் ஸ்தானிகர் மொரகொட வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் முதலமைச்சர் ஸ்டாலினையும் இலங்கைக்கு வருமாறு உயர்ஸ்தானிகர் மொரகொட அழைப்பு விடுத்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *