இந்த வருடத்தில் கடனை திருப்பிச்செலுத்த 5 பில்லியன் டொலர்கள் வேண்டும் என்கின்றார் ரணில் !

இவ்வருடத்தில் கடன் மீள் செலுத்துகைக்காக அரசாங்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு வெளிநாட்டுக் கையிருப்பை வலுப்படுத்துவதற்காக மேலும் ஒரு பில்லியன் டொலர்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வர்த்தக சம்மேளனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்டுவரும் கலந்துரையாடல்கள் இம்மாத இறுதியில் முடிவிற்குக் கொண்டுவரப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள் நியமனத்தைத் தொடர்ந்து கடன் மறுசீரமைப்பை முன்னிறுத்திய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

மேலும் நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்வது குறித்து வெளிநாடுகளுடன் பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும், ஜப்பானுடன் முறிவடைந்த நல்லுறவை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *