தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஒட்டு மொத்த பாரதத்தின் நலனை பார்க்கின்றார்களே தவிர இலங்கையின் தொப்புள்கொடி உறவான தமிழர்களின் நலனைபார்த்து செயற்படவில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
தமிழர் விடுதலைப்போராட்டத்தில் முதல் தற்கொலை போராளியான தியாகி பொன். சிவகுமாரனின் 48வது ஆண்டு நினைவு தினம், மட்டக்களப்பு வவுணதீவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் , அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணி தலைவர் இ.சத்தியசீலன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்
இதன்போது பொன்.சிவகுமாரனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த தர்மலிங்கம் சுரேஸ்,
பொன்.சிவகுமாரனின் தியாகத்தினை கண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் எழுச்சிகொண்டார்கள்.
கல்வி தரப்படுத்தலில் ஏற்பட்ட முரண்பாடுகளை தமிழர்கள் தமது உரிமைக்கான போராட்டத்தினை முன்னெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இந்த போராட்டம் 70 வருடங்களை தாண்டியும் இடம்பெற்றுவருகின்றது.
மாணவர் பருவத்தில் அவர் மூலம் ஏற்பட்ட எழுச்சி இன்றுவரையில் தமிழர் தாயகப்பகுதியில் இந்த எழுச்சி இருந்துவருகின்றது. இதனாலேயே இன்று புலம்பெயர் நாடுகளில் வாழும் இளையோரும் நினைவுதினத்தை அனுஸ்டிக்கும் நிலை காணப்படுகின்றது.
தமிழ் மக்கள் 13வது திருத்தமான ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் சென்று தமிழ் மக்களை முடக்குவதற்கு 70வருடத்திற்கு மேலாக சிங்கள தேசம் போராடிவருகின்றது.
அதனை எதிர்த்தும் இந்த மண்ணில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காகவும் ஒற்றையாட்சி அரசியலமைப்பினை எதிர்த்து தொடர்ந்து போராடிவருகின்றனர்.
வடகிழக்கு தமிழ் மக்கள் அதிகளவில் இந்தியாவினையே நம்பியுள்ளனர்.
இந்தியாவினுடைய நலனை பொருட்படுத்தாது எங்களுடைய நலனையும் பார்க்க வேண்டும் என்பதற்காக எங்களுடைய தமிழ்த் தலைவர்கள் பலமுறை குரல் கொடுத்தும் இன்றுவரை இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றம் கொள்ளவில்லை.
தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு முதலமைச்சர்களும் பாரததேசத்தின் நலனை பார்க்கின்றனரே தவிர, இங்கிருக்கின்ற தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழர்களின் நலனைப் பார்த்து செயற்படவில்லை.
அண்மைக்காலத்தில் கூட இந்த இலங்கைத் தீவிலே தமிழ் மக்களைக் கொன்றழிப்பதற்காக சிங்கள தேசம் வாங்கிய கடன் பொறிக்குள்ளே வீழ்ந்துகிடக்கும் இந்த சந்தர்ப்பத்திலே தமிழகத்தின் முதலமைச்சர் இங்கிருக்கின்ற மக்களுக்கு தாங்கள் உதவி வழங்குவதாகக் கூறி புதுடில்லிக்கு அவர் ஒரு செய்தியை சொல்லியிருக்கின்றார்.
இது கச்சதீவை மீட்பதற்கான ஒரு நல்ல தருணம், இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டுமென்று பாரதப்பிரதமரிடம் கூறியிருக்கின்றார்.
நாங்கள் தமிழ் நாட்டு மக்களை கூடுதலாக நம்பியிருக்கின்றோம்.
இங்கிருக்கின்ற தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழவேண்டும். தமிழக முதல்வர் பிரதமருக்கு செய்தியை கூறயிருக்க வேண்டும்.
சிங்கள தேசம் கடன் பொறிக்குள் மாட்டியிருக்கின்ற தருணத்தில் தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று அவர் கூறியிருக்க வேண்டும்.
ஆனால், மாறாக ஒட்டுமொத்த இந்தியாவின் நலன் சார்ந்து அவர் கூறியிருப்பது இலங்கைத் தீவில் உள்ள தமிழ் மக்களுக்கு இது வேதனையான விடயம். பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கின்றது. தமிழக முதல்வர் அவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.
வடக்கு கிழக்கு தேசத்தை அங்கீகரிக்கக்கூடிய விதமாக நீங்கள் கருத்துத் தெரிவித்திருந்தால் நாங்கள் உங்களை போற்றுதலுக்குரியவராக பார்த்திருப்போம்.
இங்கிருக்கின்ற தமிழர்கள் பாதுகாப்பாகவும் இருப்பை தக்கவைக்க வேண்டுமாகவும் இருந்தால் நீங்கள் எங்களுடைய மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.- என்றார்.




பிறசெய்திகள்