குடும்பமொன்றுக்கான நாளாந்த தொகை 700 ரூபாவாக அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குடும்பம் ஒன்று போசாக்கான உணவினை பெற்றுக்கொள்ளவது பெரும் சிரமமாக உள்ளது.

அதன்படி, நாளாந்தம் ஒரு குடும்பத்திற்கு தேவைப்படும் தொகையானது, 700 ரூபாவாக அதிகரித்துள்ளதாக வயம்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரேணுக சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இதற்கு முன்னர் கடந்த 2018 முதல் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலப்பகுதியில் இந்த தொகையானது 450 ரூபாவாக காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கர்ப்பிணித்தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குறைந்த நிறைகொண்ட பிள்ளைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திரிபோஷ வேலைத்திட்டம் தற்போது நடைமுறையில் இல்லை.

திரிபோஷ உற்பத்தியின் மூலப்பொருட்களான சோளம் மற்றும் சோயா என்பனவற்றின் தட்டுப்பாடு காரணமாக திரிபோஷ வேலைத்திட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாதாந்தம் 750 கிராம் நிறைக்கொண்ட சுமார் 16 இலட்சம் திரிபோஷ பக்கட்டுக்கள் சுகாதார அமைச்சுக்கு தேவைப்படும் நிலையில், கடந்த சில மாதங்களாக திரிபோஷ தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மீண்டும் அந்த செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டுமாயின் மாதம் ஒன்றில் 1,100 மெட்ரிக் டன் சோளமும், 550 மெட்ரிக் டன் சோயாவும் தேவைப்படுவதாக மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இவ்வாறான சூழலில், 2 மாதங்களுக்கு தேவையான சோளம் மற்றும் சோயா ஆகியன இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் கிடைக்கப்பெறவுள்ளன.

குறித்த சோளம் மற்றும் சோயா ஆகியன கிடைக்கப்பெற்றதும் உடனடியாக உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க முடியும்.

மேலும், 6 மாதம் முதல் ஒன்றரை வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் எம்.எம்.என் எனப்படும் ஊட்டச்சத்து பாணம் கடந்த 3 மாதங்களாக வழங்கப்படவில்லை என இலங்கை குடும்பநல சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், 5 வயதிற்கும் கீழ் உள்ள, குறைந்த நிறையுடைய பிள்ளைகளுக்கு வழங்கப்படும் BP -100 விசுகோத்துகளும் 4 மாதங்களாக வழங்கப்படவில்லை என அந்த சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் போசாக்கு உணவுகள் வழங்கப்படாத நிலையில், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.

உரிய அதிகாரிகள் இது தொடர்பில் உடன் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என்பதை நாம் சுட்டிக்காட்டுகின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *