அவுஸ்ரேலியா- ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையிலான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!

ஆக்கஸ் கூட்டு ஓப்பந்த விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையில் நடைபெறவிருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆக்கஸ் கூட்டணி விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருவதையடுத்து, பிரான்ஸ் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றிய அமைப்புக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது.

இதுகுறித்து அவுஸ்திரேலிய வர்த்தகத் துறை அமைச்சர் டேன் டெஹான் கூறுகையில், ‘ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும்’ என கூறினார்.

எனினும், பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதற்கு ஆக்கஸ் கூட்டணி விவகாரத்துடன் தொடர்புள்ளதா என்பது குறித்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

ஐரோப்பிய யூனியனுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையே தடையற்ற வா்த்தகத்தை ஏற்படுத்த பல சுற்றுகளாகப் பேச்சுவர்த்தை நடைபெற்று வருகின்றன.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில், ஆக்கஸ் விவகாரம் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே நடைபெறுவதாக இருந்த அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்தன.

இதன்போது முன்னதாக பிரான்ஸ் நாட்டின் நேவல் குழுமத்திடமிருந்து அணு ஆற்றலால் இயங்கும் மற்றும் அணு ஆயுத்தை ஏவும் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க செய்திருந்த ஒப்பந்தத்தை அவுஸ்ரேலியா இரத்து செய்தது.

பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான இந்த ஒப்பந்த இரத்து செய்யப்பட்டதால், இந்த கூட்டணி மீது பிரான்ஸ் கடும் கோபம் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *