ஹோட்டல்களில் சமைப்பதற்கு, டைல்ஸ்களை வெட்டுதல் போன்ற ஆபத்தானப் பொருள்களைக் கையாள்வதற்கு, 16 – 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களைப் பயன்படுத்துவதற்கு விரைவில் தடை விதிக்கப்பட உள்ளதாக தொழில் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் புதிய ஒழுங்குவிதிகளை உருவாக்க, தொழில் திணைக்களம் தயாராகி வருவதோடு, சிறுவர்களை எந்தெந்த தொழில்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது தொடர்பான பட்டியல் ஒன்றையும் வெளியிட உள்ளதாக அறிய முடிகிறது.
ஆழ்கடல் மீன் பிடித்தல், இரத்தினக்கல் அகழ்வு, மணல் அகழ்வு, இரும்பு தொழிற்சாலைகள், இரசாயன நிறுவனங்களில் பணிக்கு அமர்த்துதல் உள்ளிட்ட தொழில்களில் சிறுவர்களைப் பணிக்கு அமர்த்துவதற்குத் தடை விதிக்கப்பட உள்ளது.
இதேவேளை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் சிறுவர்களை வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்துவது தொடர்பில் திடீர் சோதனை நடவடிக்கைளை மேற்கொள்ள தயாராகி வருவதாகவும் அறிவித்துள்ளது.


