
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று பாடசாலை முடிவடையும் நேரத்தில் குளவி கொட்டி 25 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் குரங்குகளின் நடமாட்டத்தால் இன்று பகல் 1.30 மணியளவில் குளவிக் கூடு கலைந்துள்ளது. பாடசாலை முடிவடைந்து மாணவர்கள் வெளியேறுகின்ற நேரத்தில் பல மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
சில மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு உள்ளாகி மயக்கமடைந்தனர். இதனையடுத்து 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவர்களில் 11 மாணவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் ஏனையவர்கள் விடுதிகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை பாடசாலையில் குளவிக் கூடு கலைந்த போது பாடசாலையின் அபாய சமிஞ்சை ஒலி எழுப்பட்டது. இதனால் மாணவர்கள் பதற்றத்துக்குள்ளாகினர். பாடசாலையில் மூன்று வாயில்கள் காணப்பட்ட போதிலும் பிரதான வாயில் மட்டுமே திறக்கப்பட்டது. ஏனைய இரண்டு வாயில்களும் திறக்கப்படவில்லை.
இவ்வாறான ஆபத்துக்களின் போது மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் எந்த நடைமுறையுமின்றி பாடசாலையின் நடவடிக்கை காணப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.