அத்தியாவசிய பொருட்களை தாமதமின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! – ஜனாதிபதி

நவீன தொழில்நுட்பத்தினூடாக வினைத்திறன்மிக்க சேவையை வழங்கி இலங்கை துறைமுகத்தில் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை தாமதமின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கொழும்பு துறைமுகமானது உலகின் அனைத்து முன்னணி கப்பல் நிறுவனங்களுடனும் இயங்குகிறது. நிர்வாக சபை உட்பட முழு ஊழியர்களும் பொறுப்புடன் செயற்பட்டு அதனை பாதுகாக்க வேண்டும்.

சட்டத்தை மீறி இறக்குமதி செய்வதால் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை ஏலம் விடுவதில் முறைகேடுகள் நடப்பதாக தெரியவந்துள்ளது. கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனம் போன்ற அரச நிறுவனங்களால் இவ்வாறான பொருட்களை விற்பனை செய்வதில் இடம்பெறும் ஊழல்களை தடுத்து அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்ட முடியும்.

தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை தாமதமின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *