உடுப்பிட்டி வாள் வெட்டு சம்பவம்: இருவருக்கு விளக்கமறியல்- தலைமறைவாகியுள்ள நால்வரை தேடி பொலிஸார் வலைவீச்சு

யாழ்ப்பாணம்- உடுப்பிட்டி, நாலவலடியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 4 சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி, உடுப்பிட்டி- நாவலடியில் வீதியில் கதைத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது அப்பகுதிக்கு திடீரென மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த குழுவொன்று தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றது.

அதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரரணை முன்னெடுத்து வந்த பொலிஸார், குறித்த குழுவைச் சேர்ந்த ஒருவரை கடந்த வாரம் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப்போது, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்த பொலிஸார் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.

இதன்போது குறித்த சந்தேகநபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இரண்டாவது சந்தேகநபரிடம் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய  ஏனைய 4 சந்தேகநபர்களை தேடும் நடவடிக்கையினை, வல்வெட்டித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *