
திருகோணமலை,ஜுன் 12
திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி 59 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் இன்று (12) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து ஞாயிற்றுக்கிழமை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் தோப்பூர் 59ம் கட்டை ஜின்னா நகர் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான ஆர்.கொச்சிம்மா (63 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
வீட்டிலிருந்து நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதி விட்டு மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்தில் விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த பெண் இன்று காலை உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய குறித்த மோட்டார் சைக்கிளின் சாரதியை கைது செய்துள்ளதாகவும், அந்நபரை புதூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.