ஒருவேளை உணவுக்கே திண்டாட்டம்; குடும்பங்களின் மாத வருமானம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கை

இலங்கையில் 40 வீதமான வறிய குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 26,931 ரூபாவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைக் கொண்டு, 3 வேளை உணவைக் கூட பூர்த்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை தரவுகளின்படி, 2020 மற்றும் 2021ல் தொற்றுநோய் பரவிய இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நகர்ப்புறம், கிராமம் மற்றும் பெருந்தோட்டத்துறை ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் இடையே குடும்ப வருமானங்களில் பரந்த வேறுபாடுகள் உள்ளன.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையால் வெளியிடப்பட்ட அண்மைக்கால குடும்ப வருமானம் மற்றும் செலவுக் கணக்கெடுப்பின்படி, நகர்ப்புற குடும்பத்தின் சராசரி வருமானம் 116,670 ரூபா, கிராமப்புற குடும்ப வருமானம் சராசரியாக 69,517 ரூபா, பெருந்தோட்டத்துறையின் சராசரி வருமானம் 46,865 ரூபாவாக இருந்தது.

அத்துடன் இலங்கையில் உள்ள 20 சதவீத குடும்பங்கள் 17,572 ரூபாவை மட்டுமே வருமானமாக ஈட்டுவதாகவும், 40 சதவீத குடும்பங்கள் 26,931 ரூபாவை வருமானமாக ஈட்டுவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

எனினும் இலங்கையில் உள்ள பணக்கார குடும்பங்களில் 20 சதவீதத்தினர் சராசரியாக மாதத்திற்கு 196,289 ரூபாவை சம்பாதிக்கின்றனர்.

இதற்கிடையில், நடுத்தரமான 60 சதவீத குடும்பங்கள் சராசரியாக 56,079 ரூபாவை மாத வருமானத்தை ஈட்டியுள்ளன.

இதனடிப்படையில் இலங்கையில் 80 வீதமான குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் எவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இது பிரதிபலிக்கிறது.

எனினும், பணவீக்கம் என்பது பொருட்களின் விலையுயர்வை முறியடித்து அதிக வருமானத்தை ஈட்டவேண்டும் என்று மனப்பான்மையை பலருக்கு ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *