மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்ட அரச அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் இல்மனைட் கனிமவள மண் அகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் இல்மனைட் மணல் அகழ்வுக்கு பாரிய எதிர்ப்புகள் இருந்தும் கூட அதற்கு எந்தத் தடையும் இன்றி கனிமவள மணல் அகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக மக்கள் முறைப்பாடு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடி சில முடிவுகளை எடுத்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.
எனவே கலந்துரையாடல் ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும், குறித்த கலந்துரையாடல் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்