
அம்பாறை, ஜுன் 14
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதன்மூலம் கிழக்கு மாகாண கடற்றொழில்சார் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனடிப்படையில், குறித்த மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பலநாள் மீன்பிடிக் கலன்கள் மற்றும் ஒருநாள் படகுகள் ஆகியவற்றின் மூலமான மீன்பிடி நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “குறித்த துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள, கடலுணவுகளை பதப்படுத்திக் களஞ்சியப்படுத்தும் தொகுதியின் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய கடலுணவுகளை பதப்படுத்தி களஞ்சியப்படுத்தும் செயற்பாடுகளை முதற்கட்டமாக ஆரம்பிப்பதற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.