தேசிய வளங்களை விற்கும் கொள்கை அரசாங்கத்திற்கு கிடையாது! – அமைச்சர் நாமல்

இந்திய நாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிடுவதற்காகவே இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மாறாக குறைகளை கண்டறிய அவர் இங்கு விஜயம் மேற்கொள்ளவில்லை என விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,

எமது அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படுகிறது. பல நாடுகளை சேர்ந்தோர் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள்.

ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அனைத்து நாடுகளுடனும் ஒன்றினைந்து செயற்படுகிறோம். இந்தியா இலங்கைக்கு அயல்நாடு, இரு நாட்டுக்குமிடையில் வரலாற்று ரீதியில் நல்லுறவு காணப்படுகிறது.

ஆகவே, இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை பலப்படுத்தும் வகையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரது இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

நாட்டின் சுயாதீனத்தன்மையை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்படும். எக்காரணிகளுக்காகவும் சுயாதீனத்தன்மையை விட்டுக்கொடுக்கமாட்டோம். தேசிய வளங்களை விற்கும் கொள்கை அரசாங்கத்திற்கு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *