மலையக அரசியல்வாதிகள் ஒன்று பட்டாலே அபிவிருத்தி கிட்டும்! – ஜீவன் தொண்டமான்

மலையக மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்ள, மலையக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர் எம். வேலுகுமார் கேட்ட கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் தெரிவிக்கையில்,

பெருந்தோட்டங்களில் உள்ள வைத்திய நிலையங்கள் செயற்பாட்டில் இல்லை. வைத்திய நிலையங்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

என்றாலும், கொரோனா நிலைமையில் மக்களை பாதுகாப்பதற்கு இந்த வைத்திய நிலையங்களுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கி இருக்கின்றதா என கேள்வி எழுப்பினார்.

மேலும், எமது காலத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு அமைக்கப்பட்ட வீடுகளை விமர்சித்த நீங்கள் தற்போது அந்த வீடுகளை மக்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துவருவது மகிழ்ச்சியளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

பெருந்தோட்டங்களில் இருக்கும் வைத்திய நிலையங்கள் மோசமான நிலையிலேயே இருந்து வருகின்றன. இது அண்மையில் இடம்பெற்றதொன்று அல்ல. பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை இருந்து வருகின்றது.

இதற்கு ஒரு தீர்வு எடுப்பதாக இருந்தால், மலையகத்தில் இருக்கும் அனைத்து அரசியல் தலைவர்களும் இணைந்து மலையக மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை குறிப்பிட்டு சுகாதார அமைச்சருக்கு கோரிக்கை ஒன்றை முன்வைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *