
கொழும்பு, ஜுன் 16
நாட்டின் பாவனைக்காக இறக்குமதி செய்யப்படும் எத்தனோல் அளவு மற்றும் அதனை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு முறையான கட்டுப்பாடு இல்லாதமை குறித்து கோப் குழு அவதானம் செலுத்தியுள்ளது.
இதன்படி, இலங்கையில் எத்தனோல் இறக்குமதி செய்வதற்கு பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை தொடர்பான விபரங்களை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுபானம் உற்பத்தி தவிர்ந்த, மருந்து உள்ளிட்ட வேறு உற்பத்திகளுக்காக இறக்குமதி செய்யப்படும் எத்தனோல் உரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றா என்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வாகன மற்றும் வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரங்களை விநியோகிப்பதற்கு தொடர்பில் கோபா குழு வினவியதுடன், இதற்காக மோட்டார் வாகன திணைக்களத்துடன் இணைந்து முறையான வழிமுறைகளை பின்பற்றுமாறு முன்னதாக அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எனினும், அதற்கு எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாமைக்கு கோபா குழு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வினைத்திறனுடன், வெளிப்படைத்தன்மையுடனுடம், இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு முன்னெடுத்து செல்வதற்கான வழிமுறைகளை 4 மாதங்களில் முன்வைக்குமாறு ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்களத்திற்கு கோபா குழு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.