திருகோணமலையில் வெளிநாட்டு தொழில் வாய்ப்புச் சந்தை,இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் பங்கேற்பு
நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற் கொண்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்பினை எதிர்பார்ப்பவர்களுக்கான தொழில் சந்தை இடம் பெற்றது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் பிரதேச செயலகங்களும் இணைந்து இதனை இன்று (16) ஏற்பாடு செய்திருந்தனர்.
திருகோணமலை 4ம் கட்டையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக மாவட்ட காரியாலயத்தில் குறித்த தொழில் சந்தை இடம் பெற்றது. தம்பலகாமம் ,கிண்ணியா,திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகங்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
இதில் மத்திய கிழக்கு நாடுகள், ரோமானியா போன்ற நாடுகளுக்கான தொழில் வாய்ப்பினை பெறுவதற்கான நேர்முகப் பரீட்சையும் இடம் பெற்றன. சவூதி அரேபியா,கட்டார், குவைட்,ஓமான்,டுபாய், போன்ற நாடுகளில் தொழில் வாய்ப்பை பெற குறித்த தொழில் சந்தை இடம் பெற்றன.
சாரதி, மேசன், தொழிலாளி, பிளம்பர்,எலக்ரீசியன்,காபென்டர்,வெயிட்டர் மற்றும் ரோமானியா நாட்டுக்கான ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்புக்காகவும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதில் வெளிநாட்டு தொழில் முகவர்கள், பணியக அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டதுடன் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளும் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக அதிக ஆர்வம் கொண்டு இத் தொழில் சந்தையில் பங்கு பற்றினர்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெறுவதற்காக பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதில் வெளிநாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,மாவட்ட இணைப்பாளர், பணியக பயிற்சி நிலைய முகாமையாளர்,முகவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.









