அரசாங்கமும் ஜனாதிபதியும் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுவதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் ஒன்றுகூடி இன்றைக்கு பேசு பொருளாக இருக்கின்ற வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் நியமனம் தொடர்பாக ஆராய்ந்தோம்.
வடக்கு கிழக்கு மாகாண சபைகளில் மிகப் பெரும்பாலான தமிழ் மக்கள் தங்களுடைய மொழியில் தங்களுடைய நிர்வாகத்தை கையாள்வதற்கே விரும்புகின்றார்கள்.
அப்படி ஓரளவிற்கேனும் கிடைத்த உரிமையை நாங்கள் இழக்கக்கூடாது என்பதற்காக மொழி உரிமையையும் தங்களுடைய நிர்வாகத்தை தாங்களே கையாள்வதற்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத்தான் பந்துலசேனாவினுடைய நியமனத்தை திருப்பி பெற்று எங்கள் மக்கள் மத்தியில் நிர்வாகத்தை செய்வதற்கு அவர்களது மொழியில் நிர்வாகத்தை நடத்தக்கூடிய ஒருவரை நியமிக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கோருகின்றோம்.
தமிழ் மக்கள் மத்தியில் தகுதியுடைய எத்தனையோபேர் இருக்கின்றார்கள். சித்தியடைந்தவர்கள், அனுபவமிக்க ஆளுமையுள்ளவர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் இருந்து ஒரு பிரதம செயலாளரை வடக்கு மாகாண சபைக்கு நியமிக்க வேண்டும் என்று இங்கு தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம்.
அரசாங்கமும் ஜனாதிபதியும் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் நடைமுறைகளிற்கு விரோதமாகவும் இவ்வாறான செயற்பாடுகளை செய்யாமல் இருப்பதற்காக நாங்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றுபட்டு பிரதம செயலாளரை மாற்றி தமிழ் மக்களின் விருப்பத்திற்கு அமைவாக தமிழ் மொழியில் கடமையாற்றக்கூடிய தலைமை நிர்வாகி ஒருவரை நியமிப்பதற்கு அரசாங்கத்துடன் பேச வேண்டும்.
அல்லது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக ஒன்று கூடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் இங்கே தீர்மானித்திருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.