பரபரப்பான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸியை வீழ்த்தியது இலங்கை அணி!

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

பல்லேகல மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், அவுஸ்ரேலிய அணியும் இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, 47.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ஓட்டங்களை பெற்றிருந்த போது, மழைக் குறுக்கிட்டது. இதனால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 34 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் குனெமன் மற்றும் மெக்ஸ்வேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஸ்வெப்ஸன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து போட்டி ஆரம்பிக்கப்படுகையில், அவுஸ்ரேலிய அணிக்கு 43 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு 216 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, 37.1 ஓவர்கள் நிறைவில் 189 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இலங்கை கிரிக்கெட் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் இலங்கை அணி சமநிலைப்படுத்தியுள்ளது.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேவிட் வோர்னர் 37 ஓட்டங்களையும் க்ளென் மேக்ஸ்வெல் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சமிக்க கருணாரத்ன 3 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர, தனஞ்சய டி சில்வா மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, இலங்கை அணியின் வெற்றி மிக முக்கிய காரணமாக இருந்த சமிக்க கருணாரத்ன தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *