ஐப்பசி 06 ஆசிரியர் தினமல்ல தேசிய கறுப்பு தினம்!

இலங்கையில் ஆசிரியர் தினம் நாளை கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்றைய தினத்தை நாம் தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாகப் பிரகடனப்படுத்தி இருக்கின்றோம் என இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு, கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராசா ருபெஷன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இருளை நீக்கும் தலைமுறையை இருளில் தள்ளுவதற்கு எதிராக நாளை ஆறாம் திகதி பாடசாலைகள், ஆசிரியர் இல்லங்கள் மற்றும் ஏனைய இல்லங்கள் தோறும் கறுப்புக் கொடியை ஏற்றி ஆசிரியர் தினம் ‘தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக’ அனுஷ்டிக்கப்படும்.

ஆசிரியர் தினத்தன்று நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்துக் கட்சிகளின் தலைமைகளையும் ஒருமித்து சந்தித்து அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு பற்றி கலந்தாலோசித்து அதுதொடர்பான விரைவான தீர்விற்கு செல்வதாகவும், ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு எதிரான தேசிய ஒற்றுமை அமைப்பு தீர்மானித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, எமது நிலையை வெளிப்படுத்த ஆசிரியர் தினமான நாளை நாம் தேசிய கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *