இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி, தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை அரசாங்கத்திற்கு தனது அரசாங்கம் முழு ஆதரவை வழங்கும் என்று உறுதியளித்துள்ளார்.
நேற்றையதினம் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போது உயர்ஸ்தானிகர் உமர் பாரூக் புர்கி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் பலதரப்பு உறவுகள் அத்துடன் அரசியல், வர்த்தகம், கலாசாரம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புகள் மேலும் பலப்படுத்தப்படும் என உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
இலங்கை மாணவர்களுக்கு உயர்கல்விக்கான புலமைப்பரிசில்களை வழங்கியமைக்காகவும், இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக தெரிவு செய்யப்பட்ட மருந்துகளை அனுப்பியமைக்காகவும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து உயர்ஸ்தானிகரிடம் ஜனாதிபதி விளக்கினார்.
தற்போதைய நிலைமையை சமாளிக்க பாகிஸ்தான் அரசாங்கம் உதவிகளை வழங்கும் எனவும், இலங்கை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்