
கொழும்பு,ஜுன் 18
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், உணவு, மருந்துகள், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை காணப்படுவதால் அந்நாட்டு பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இலங்கைக்கு கடன் உதவித் திட்டத்தின் கீழ், எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் உணவு பொருள்களை வழங்கி இந்தியா உதவி வருகிறது.
இந்நிலையில் இலங்கை நிலைமை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தலைமையில் டெல்லியில் இன்று வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வெளியுறவுத் துறை இணை மந்திரிகள் முரளீதரன், மீனாட்சி லேகி, ராஜ்குமார் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பாஜகவை சேர்ந்த ராஜ்தீப் ராய் மற்றும் ஜிவி எல் நரசிம்மராவ் சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி, திமுக எம்பி திருச்சி சிவா, பிஜு ஜனதா தளம் சார்பில் சுஜீத் குமார் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை பொருளாதார நெருக்கடி, அந்நாட்டில் வெளியேறி இந்தியாவிற்கு வருவோர் உள்ளிட்டவை குறித்து அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு விவகாரங்கள் மற்றும் இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவின் பங்கு குறித்த சாதகமான சூழ்நிலை குறித்து விவாதம் நடைபெற்றதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
இந்த கடினமான நேரத்தில் நமது அண்டை நாடான இலங்கையுடன் நிற்பதன் அவசியத்திற்கு இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




