புழுதி புயலால் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி தொடர் விபத்து; 8 பேர் பலி

அமெரிக்காவின் உட்டா மாகாணம் கனோஸ் நகருக்கு அருகே மிகப்பெரிய நெடுஞ்சாலை உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தன.

விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விடவும் போக்குவரத்து மிகவும் நெரிசலாக இருந்தது. இந்நிலையில் அங்கு திடீரென பலத்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து அங்கு புழுதி‌ புயல் உருவானது.

இதனால் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு, முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாமல் போனது. இதனால் நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி ஒன்று முன்னால் சென்ற ஒரு காரின் மீது மோதி நின்றது. இதையடுத்து லாரிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதின.

இப்படி மொத்தம் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து நேரிட்டது. இந்த கோர விபத்தில் 4 சிறுவர்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஏற்கனவே, கடந்த மாதம் 20-ம் திகதி அலபாமா மாகாணத்தில் புயல் தாக்கியபோது 15 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட சங்கிலி தொடர் விபத்தில் 10 பேர் உயிரிழந்ததமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *