
ஏறாவூர்,ஜுன் 19
ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முருகன்கோயில் வீதி மயிலெம்பாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபப் பெண் மண்ணெண்ணெய் விளக்கு நிலத்தில் விழுந்து தீப்பிடித்ததில் பலியான சம்பவம் சனிக்கிழமை(18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முருகன் கோயில் வீதி, மயிலெம்பாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான கிருஷ்ணபிள்ளை வள்ளிப்பிள்ளை என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மின்வெட்டு இடம்பெற்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளதோடு, தீக்காயங்களுக்கு உள்ளான பெண்ணை அயலவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், குறித்த பெண் ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

