சர்வதேச அமைப்புடன் இலங்கை நேர்மையாக செயற்படுகிறது

கொழும்பு, ஜுன் 20

மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச அமைப்புடன் இலங்கை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயற்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம், வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது அமர்வின் பக்க அம்சமாக, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டை சந்தித்தபோது, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளார்.

காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், நிலையான அபிவிருத்தி இலக்கு பேரவை மற்றும் இலங்கை மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட உள்ளூர் பொறிமுறைகளினால் நாட்டில் எட்டப்பட்டுள்ள பெறுபேறுகளையும் வெளிவிவகார அமைச்சர் விரித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக உயர்ஸ்தானிகருக்கு முன்னர் விடுக்கப்பட்ட அழைப்பு இன்னும் அப்படியே உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அமர்வின் ஆரம்பத்தில் உயர்ஸ்தானிகர் அறிவித்தமைக்கு அமைய, அவரது நிறைவான ஓய்விற்காக வெளிவிவகார அமைச்சர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், சீனாவின் நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் சென் சூ உடனான இருதரப்பு சந்திப்பின் போது, இலங்கைக்கு பல ஆண்டுகளாக வழங்கிவரும் ஆதரவிற்காக வெளிவிவகார அமைச்சர் சீனாவுக்கு நன்றி தெரிவித்தாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *