
அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளேர் ஓ நீல் (Clare O’Neil) இன்று இலங்கை வருகிறார்.
இலங்கை, பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுடன் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இந்த பயணத்தை அவுஸ்திரேலிய அமைச்சர் மேற்கொள்கிறார்.
அண்மைய வாரங்களில் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குப் பயணித்த பல புகலிடக் கோரிக்கையாளர்களின் படகுகளை அவுஸ்திரேலிய படையினர் இடைமறித்த நிலையிலேயே இந்த பயணம் இடம்பெறுகிறது.
இந்தநிலையில் படகுகளில் வரும் மக்கள் அவுஸ்திரேலியாவில் குடியேற மாட்டார்கள் என்ற செய்தியை அனுப்ப, தமது அரசாங்கம் இந்தப் பயணத்தைப் பயன்படுத்த விரும்புவதாக பிரதமர் அந்தனி அல்பானீஸ் கூறியுள்ளார்.
தாம் மனிதநேயத்தில் பலவீனமாக இல்லாமல் எல்லையில் வலுவாக இருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இலங்கையில் பிரச்சினைகள் இருப்பதையும், ஆட்கடத்தல் காரர்களால் தவறான செய்திகள் வழங்கப்படுகின்றன என்பதையும் தாம் புரிந்துகொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ஓ நீல் தனது பயணத்தின்போது இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
அவுஸ்திரேலிய எல்லைப் படையினர் கடந்த மே 21 அன்று நடந்த தேர்தலுக்குப் பின்னர் மூன்று புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை இடைமறித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிற செய்திகள்

