கோட்டாபய ராஜபக்ச – ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருக்கும் வரை, இலங்கையின் தற்போதைய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக குழப்பத்தில் இருந்து இலங்கையை மீட்க உலக நிதி நிறுவனங்களோ அல்லது நன்கொடை நாடுகளோ முன்வராது என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 15 உறுப்பினர்களுக்கு மிகாத அமைச்சரவையுடன் கூடிய விரைவில் அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதும், பொதுத் தேர்தலை நடத்த உறுதிமொழியுடன் அனைவரின் ஒருமித்த கருத்துடன் அவர்களிடமிருந்து ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுப்பதும் தான் ஒரே தீர்வு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மைத்திரிபால,
“எனக்கும் பிரதமர் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் யஹபாலன ஆட்சியின் போது நிலவிய போட்டி ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் விக்கிரமசிங்க ஆகியோரால் மீண்டும் அரங்கேற்றப்பட்டு இப்போது நாட்டின் அவலங்களை மேலும் மோசமாக்குகிறது.
அமைச்சர்கள் மற்றும் பொது அதிகாரிகளுக்கு இடையேயான கூட்டங்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்து அவர்களின் பணியை எப்படி செய்வது என்று ஆலோசனை கூறுகிறார்.
அரசாங்க மற்றும் தனியார் துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தங்கள் வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல, பிரதமர் விக்கிரமசிங்கவும் அலரிமாளிகையில் மாநாடுகளைக் கூட்டுகிறார்.
துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் இருவரும் இணைந்து செயட்படுவதில் தவறிவிட்டனர், இதனால் 22 மில்லியன் இலங்கையர்களின் இக்கட்டான நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது,” என்று சிறிசேன மேலும் தெரிவித்தார்.
கடந்த மூன்று வருடங்களில் SLPP ஆட்சியின் கீழ் இயலாமை, தவறான நிர்வாகம், ஊழல் மற்றும் தவறான ஆட்சி ஆகியவை இலங்கையை ஒரு தோல்வியடைந்த அரசு மற்றும் ஒரு தோல்வியடைந்த நாடு என்று உலக சமூகம் முத்திரை குத்த வழிவகுத்தது.
ரணிலும் வழக்கம் போல் படுதோல்வி அடைந்து விட்டார், சொல்லொணாத் துன்பங்களில் இருந்து மீள்வதற்கான அறிகுறி கூட இல்லை. அதனால் தான், இந்த ஆட்சி விலகும் வரை இலங்கைக்கு உதவ சர்வதேச சமூகம் மறுக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்

