
கொழும்பு, ஜுன் 21
சர்வதேச நாணய நிதிய (IMF) அதிகாரிகள் மட்டத்தில் விரைவில் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை விரைவில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், அனைத்து தரப்பினருடனும் பல்வேறு மட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்ட மூல வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த 21 ஆவது திருத்த சட்ட மூல வரைபுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனை வர்த்தமானியில் வெளியிட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் அபிவிருத்தி உதவிகளை வழங்கியமைக்கு அவுஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

