யாழில் ரூ.10 லட்சம் பெறுமதியான மின் வயர்களை வெட்டி விற்ற குழு கைது

யாழ், ஜுன் 22

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த சம்பவத்துடன் மின்சார சபை ஊழியர் ஒருவர் தொடர்புபட்டு உள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடமராட்சி குடாரப்பு பகுதியில் மின் தடை காலத்தில் மின்சார வயர்கள் வெட்டப்பட்டு களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஆழியவளை பகுதியில் உள்ள பண்ணை ஒன்றுக்கு திருடப்பட்ட மின் வயர்கள் 2 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் அறிந்து கொண்டனர்.

அதனை அடுத்து பண்ணை உரிமையாளருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மூவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை 2 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வயரின் பெறுமதி சுமார் 10 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *