வடக்கு கிழக்கில் இராணுவத்தினரும் பொலிஸாரும் போதைப்பொருள் விற்பனைக்கு பாரிய பங்களிப்பு! சபையில் சிறிதரன் எடுத்துரைப்பு

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போதைப்பொருள் விநியோகத்தில் இராணுவத்தினரதும், பொலிஸாரினதும் பங்களிப்பு உள்ளது. தமிழ் இளைஞர்கள் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கப்படுகின்றார்கள்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சுகாதார நெருக்கடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றஞ்சாட்டிய அவர், மேலும் கூறுகையில்,

“நாட்டின் மொத்த இராணுவத்தினரது எண்ணிக்கையில் 70 சதவீதமானோர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளனர். பொலிஸாரும் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இருப்பினும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கின்றது.

வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் விநியோகத்தில் இராணுவத்தினரதும், பொலிஸாரினதும் பங்களிப்பு உள்ளது. வடக்கு, கிழக்கு தமிழ் இளைஞர்கள் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கப்படுகின்றார்கள்.

இவ்வாறான போதைப்பொருள் அடிமைகளால் வடக்கு, கிழக்கு மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றார்கள். ஆகவே, இவ்வாறான சுகாதாரச் சீர்கேட்டை தடுக்கும் வகையில் ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” – என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *