பாலியல் துஷ்பிரயோகம்: சிறுமி நீதிபதியிடம் விடுத்தள்ள கோரிக்கை

கொழும்பு, ஜுன் 24

இரவு நேரத்தில் தந்திரமான முறையில் வீட்டுக்குள் நுழைந்து தாய் மற்றும் மூத்த சகோதரிகளுக்கிடையில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியை கடத்தி பாழடைந்த வீடொன்றினுள் கொண்டு சென்று இரண்டு சந்தர்ப்பங்களில் அச்சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை, அச்சிறுமி அணிந்திருந்த காதணிகளைக் கொள்ளையிட்டமை ஆகியவை உள்ளிட்ட ஐந்து குற்றங்களுக்கு ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியாக உறுதியான 40 வயதுடைய ஒருவருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் 60 வருட கடூழியச் சிறைத்தண்டனையுடன் 95 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

முதல் தடவையிலேயே குற்றத்தை ஒப்புக் கொண்டதால் குற்றவாளியான நபருக்கு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நான்கு லட்சம் ரூபாவை செலுத்துமாறும் உத்தரவிட்ட நீதிபதி, இவ்வாறு தண்டம் மற்றும் அபராதத்தையும் செலுத்த தவறினால் மேலும் நான்கரை வருட இலகு சிறைத்தண்டனையும் விதித்ததோடு, இச்சிறைத் தண்டனை காலத்தை ஒரேயடியாக அதாவது ஒரு வருட காலத்தில் நிறைவு செய்யும் வகையில் வழங்குவதற்கும் உத்தரவிட்டார். ஷ

குற்றவாளிக்கு தண்டனையை விதிப்பதற்கு முன்னர் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நீதிமன்றில் கூறுவதற்கு ஏதேனும் உள்ளதா என நீதிமன்றம் வினவியபோது, எட்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தக் குற்றச் செயலின் காரணமாக தான் சமூகத்தில் அநேக அவமானத்துக்கு உள்ளானதால் எதிராளிக்கு மரண தண்டனை வழங்குமாறு வேண்டிக் கொண்டார்.

தற்போதுள்ள சட்டங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது என பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தெளிவுபடுத்திய நீதிபதி இந்த தண்டனையை விதித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *