
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
நாட்டுக்கு வருகை தரவிருந்த எரிபொருள் கப்பல் மேலும் தாமதமடைந்துள்ள நிலையில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய நாட்டுக்கு இந்த வாரம் வருகை தரவிருந்த பெற்றோல், டீசல் மற்றும் மசகு எண்ணெய் அடங்கிய கப்பல்கள் மேலும் தாமதமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து விநியோகத்தர்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வங்கி மற்றும் விநியோக வசதிகள் தொடர்புடைய காரணங்களினால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அடுத்த கப்பல்கள் நாட்டுக்கு வரும் வரை பொதுப் போக்குவரத்து, மின்னுற்பத்தி மற்றும் கைத்தொழில்துறை ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான டீசல் மற்றும் பெற்றோல் தொகை குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, குறித்த எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வருகை தரும் தினம் குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் உறுதிப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடுத்த கட்ட மசகு எண்ணெய் கப்பல் வரும் வரை சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகவும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் பழைய மற்றும் புதிய விநியோகத்தர்களுடன் நிலைமை தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாமதத்திற்கும் அசௌகரியங்களுக்கும் வருந்துவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்

