இலங்கையை கைவிடமாட்டோம்: ஐரோப்பிய நாடுகள் உறுதி

கொழும்பு. ஜுன் 25

ஐரோப்பிய பிராந்திய நாடுகளை இலங்கையின் நண்பர்களாகக் கருதுங்கள். இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கையை கைவிடாது தொடர்ந்து ஆதரவளிப்போம். ஐரோப்பிய பிராந்திய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தனர்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால திட்டங்கள் தொடர்பில் வழங்கப்படும் உறுதியான செய்தியுடன் சர்வதேச சமூகம் இலங்கைக்கு இலகுவாக உதவ முடியும் என தூதுக்குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நாட்டின் சனத்தொகையில் 90% சதவீதமானவர்கள் கிராமப்புறங்களில் வாழ்வதோடு, அதில் 75% சதவீதமானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உரம் மற்றும் எரிபொருளை வழங்குவதன் மூலம் உணவு விநியோகம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

காணி பிரச்சினைக்கு தீர்வாக விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு விவசாயம் செய்யப்படாத அரச காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள மனிதாபிமான சூழ்நிலையை கருத்திற் கொண்டு நிரந்தர தீர்வு வழங்குவதற்கும் சட்டத்தை அமுல்படுத்தும்போது ஒருபோதும் அதில் தலையிடாது, கட்சி பேதமின்றி நியாயமாக நடந்துகொண்ட விதம் பற்றியும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். முதலீடு, சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

ஐரோப்பிய சங்கத்தின் தூதுவர் (Denis Chaibi), பிரான்ஸ் தூதுவர் (Eric Lavertu), இத்தாலி குடியரசின் தூதுவர் (Rita Mannella), நோர்வே தூதுவர் (Trine Jøranli Eskedal), நெதர்லாந்து தூதுவர் (Tanja Gonggrijp), ஜெர்மனிய தூதுவர் (Holger Lothar Seubert), ருமேனியாவின் தூதுவர் கலாநிதி (Victor Chiujdea), துருக்கிய தூதுவர் (Rakibe Şekercioğlu), சுவிட்சர்லாந்து சம்மேளனத்தின் தூதுவர் (Dominik Furgler), ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அநுர திசாநாயக்க மற்றும் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *