நாடு மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது: சஜித் குற்றச்சாட்டு

கொழும்பு,ஜுன் 26

இத்தருணத்தில் எமது நாட்டை ஒரு மோசமான நிலைக்கு மொட்டு அரசாங்கம் தள்ளியுள்ளது எனவும், தூர நோக்கற்ற மற்றும் விஞ்ஞானபூர்வமற்ற கதைகளின் அடிப்படையில் அமைந்த ஒரு பயணத்தால் முழு நாடும் அகதிமுகாமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனநாயக, சுதந்திரமான மற்றும் வெளிப்படையான மக்கள் போராட்டம் மூலமே இச்சூழ்நிலையிலிருந்து வெளியேற உள்ள ஒரே வழி எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (25) தெரிவித்தார்.

தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டின் உண்மை நிலையை புரிந்து கொண்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் தமது வேலைத்திட்டத்தை மாற்றிக்கொள்வார்கள் என நம்பினாலும், அவ்வாறான மாற்றமொன்று இடம் பெறவில்லை எனவும், மக்களுக்கு என்ன நடந்தாலும் பாமரத்தனமான அரசியலில் ஈடுபட்ட வன்னம் அடுத்த இரண்டு வருடங்களுக்கும் ஆட்சியின் சுகத்தை அனுபவிக்க மிகவும் பொருத்தமான வாயிற்காவலர் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத, மக்களைக் பாதுகாக்க முடியாத ஒரு அரசாங்காத்தால் பயனில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் டொலர் கையிருப்பை அதிகரிப்பதற்கு முன்பு தங்கள் சொந்த டொலர் கையிருப்பை அதிகரிக்க முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய வங்கி மோசடியின் இரண்டாம் கட்டமாக எரிவாயு மூலம் பெருமளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும்,இத்தகவல் கோப் குழுவில் வெளிப்பட்ட போதிலும் அனைத்துத் தகவல்களும் மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

மருந்துப்பொருட்கள் மற்றும் எரிவாயு மூலம் கூட சுரண்டல் மேற்கொள்ளும் யுகமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,முழு நாட்டினாலும் நிராகரிக்கப்பட்ட ராஜபக்சக்களை பாதுகாக்கும் வாயிற்காவலர் மற்றும் குறுகிய நலன்களுக்காகச் செயற்படும் சந்தர்ப்பவாதிகள் பலர் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய அறிஞர்கள் பேரவையின் மாவட்ட பிரதிநிதிகள் நியமனம் இன்று (25) இடம் பெற்றது. இதன்பிரகாரம், மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட செயலாளர்கள்,ஊடக செயலாளர்கள் மற்றும் ஏனைய பிரதிநிதிகளுக்கும் நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன.

தேசிய அறிஞர்கள் பேரவை என்பது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த பல்கலைக்கழக புத்திஜீவிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஓர் அமைப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *