நாவாந்துறையில் இளைஞன் ஒருவர் உயிரை மாய்க்க காரணமாக அமைந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பெண்கள் யாழ்ப்பாண பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் புறா வளர்ப்பில் ஈடுபடும் இளைஞர்களிற்கிடையிலான மோதலை தொடர்ந்து, 4 இளைஞர்களை சமரசத்திற்கு என அழைத்து, அவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. கண்களில் மிளகாய்த்தூள் விசிறப்பட்டு, முகத்தில் பச்சை மிளகாயும் தேய்க்கப்பட்டது.
பெண்களாலேயே இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டது.மேலும் இந்த சம்பவத்தை காணொளி எடுத்து, சமூக ஊடகங்களிலும் பதிவேற்றினர்.
அத்தோடு இது உள்ளூரில் பரவலாக பகிரப்பட, தாக்குதலிற்குள்ளான இளைஞன் ஒருவரை சக நண்பர்கள் கேலி செய்துள்ளனர். தாக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அவமானத்தால் 20 வயதான இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். தாக்கப்பட்ட ஏனைய 3 இளைஞர்களும் இன்று யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய 6 பெண்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டனர். மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர்.