இரத்தினபுரி, பெல்மடுல்ல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் கொத்தணியை வெளிநாட்டில் ஏலமிட திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக விசேட விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறும், தீவிர பாதுகாப்பு வழங்குமாறும், முழு அரச தலையீட்டை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த மாணிக்க கல் எதிர்வரும் நவம்பர் மாதம் சீனாவில் இடம்பெறும் இரத்தினக்கல் ஏலத்தில் விற்பனை செய்வதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை குறிப்பிட்டுள்ளார்.
நீல கல்லின் உரிமையாளரின் விருப்பத்திற்கமைய வெளிநாட்டில் ஏலத்திற்காக கொண்டு செல்லப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிக பெறுமதியான இந்த மாணிக்க கல்லை இரத்தினபுரியில் இருந்து கொழும்பிற்கு கொண்டுவருவது தொடர்பில் இதுவரையில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார். அதற்கு அவசியமான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.
Advertisement
இதேவேளை, இந்த நீல நிற மாணிக்க கல் தொடர்பில் வெளிநாட்டு வர்த்தக பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிவ்யோர்க் டைம்ஸ் சஞ்சிகை மூலம் இதற்கான பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த வார இறுதியில் வெளிநாட்டு சஞ்சிகைகளில் இதற்கான முழுமையான பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது