தினமும் காட்டு யானைகளை விரட்டும் சிறுவர்கள்! தொடரும் அவலம்

காட்டு யானைகளை அன்றாடம் சிறுவர்கள் விரட்டும் நிகழ்வு தற்போது வழமையாகி விட்டது.

அம்பாரை மாவட்டம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் குடியிருப்பை அண்மித்த வயல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடாமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன், அவற்றை விரட்டும் முயற்சியில் சிறுவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச வயல் வெளி பகுதியில் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் 10 முதல் 20 வரை வருகை தந்த வண்ணமுள்ளன.

இவ்வாறு வருகை தரும் காட்டு யானைகள் அருகில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உள்நுழைவதுடன் அவ் யானைகளை சிறுவர்கள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.

கல்முனை மாநகர எல்லை பிரிவில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கல்முனை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கீறின் பில்ட் தொடர்மாடி குடியிருப்பு பகுதி மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பொலிவேறியன் குடியிருப்பு வீட்டு திட்ட பகுதியை அண்மித்த வயல் வெளியில் காட்டு யானைகளின் வருகை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இரவு , பகல் நேரங்களில் மக்களின் குடியிருப்பு பகுதிகயில், காட்டு யானைகள் வருகை தருவதாகவும், இதனால் மிகுந்த அச்ச நிலையில் தாம் வசித்து வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்தவர்கள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் வயல் வெளிகளில் சஞ்சரித்து காணப்படும் குறித்த காட்டு யானை கூட்டத்தினை காண்பதற்காய் பிற்பகல் வேளையில் பொது மக்கள் வருகை தந்து பார்வையிட்டு செல்வத்தினை காணக்கூடியதாய் உள்ளது.

இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் காரைதீவு இமாவடிப்பள்ளி நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் மக்கள் வாழும் பகுதிகளில் காட்டு யானைகள் வருகை தந்து உடமைகளுக்க்கு சேதம் விளைவித்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும் .

அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களில் வயல் நெல் அறுவடை முடிந்தால் இவ் பிரதேசங்களில் யானைகளின் வருகையேன்பது தொடர்கதையாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *