காவத்தை – வட்டபொத்த தோட்டத்தினுள் நேற்று முன்தினம் நுழைந்த பெரும்பான்மையினக் கும்பலின் கடும் தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தத் தோட்டத்தின் மத்திய பிரிவில் உள்ள தோட்ட குடியிருப்பில் வாழும் மக்களின் மீது, இந்தத் தோட்டத்திற்கு அண்மித்த யடாகர கிராமத்தில் வசிக்கும் பெரும்பான்மையின கும்பல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, படு
காயமடைந்த தமிழ் இளைஞர்கள் மூவரும் அவர்களில் ஒருவரது தாயாரும் காவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விடயம் குறித்து தகவலறிந்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள், சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று அச்சத்தில் வாழும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இவ்விடயம் குறித்து இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்ததோடு, இச்சம்பவம் தொடர்பாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானுக்கும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலின் போது, தோட்டக் குடியிருப்பொன்றும், நான்கு முச்சக்கர வண்டிகளும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளதுடன் தாக்கப்பட்ட இளைஞருக்கு சொந்தமான, அவர் சுயதொழிலில் ஈடுபடும் இயந்திரங்களும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
அத்துடன் அவரது இரண்டு பவுண் தங்க நகையும் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களுக்காக தான் துணிந்து செயற்படுவதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் பெருமாள்
தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாக்கப்பட்ட தோட்டப்புற மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.





