60 ஆண்டுகளின் பின் விவசாயிகளுக்கு விடுக்கப்பட்ட சவால்?

மன்னார் மாவட்டத்தில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பான விசேட கூட்டம் நேற்று (14) இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டம், மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட அரச அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், பிரதேசச் செயலாளர்கள், உள்ளடங்களாக உரிய திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இக்கூட்டத்தில்,

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பாக பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக பயிர்ச் செய்கையின் அபிவிருத்தி தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது கட்டுக்கரை குளத்தில் 7 அடி 8 அங்குலம் நீர் காணப்படுவதோடு, மேலும் சிறிய குளங்களும் நிரம்பிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், முதலாவது நீர் வினியோகமானது இம்மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் இறுதி திகதியாக எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 28 எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.

மேலும், இந்த கால போகத்திற்கு 31,339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் போது கால்நடை பராமரிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், கால் நடைகளை இம்முறை புல்லறுத்தான் கண்டல்,தெருவெளி,தேத்தாவடி போன்ற இடங்களில் கால் நடைகளை பட்டி அடைத்து பராமரிக்கும் படி கால்நடை பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த பகுதிகளில் கால்நடைகளை பராமறிப்பவர்களையும் ஒழுங்குபடுத்தி குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இம்முறை ஜனாதிபதியின் நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்தல் என்ற சிந்தனையின் அடிப்படையில் இயற்கை பசளை யின் மூலம் குறித்த பயிர்ச் செய்கையை முன்னெடுக்க வேண்டும் என்ற ஆலோசனை வழங்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் இயற்கை பசளை உற்பத்தியை பெரிய மட்டத்திலும்,சிறிய மட்டத்திலும் தனி நபர்களின் வீடுகளிலும் விவசாயிகள் உற்பத்தியை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 60 வருடங்களின் பின்னர் முதல் முதலாக விவசாயிகள் இயற்கை பசளை மூலம் விவசாய செய்கையை மேற்கொள்ளவுள்ளதால், இது ஒரு சவாலாக அமையும் எனவும்,குறித்த சவாலுக்கு முகம் கொடுத்து இயற்கை பசளை மூலம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இக் கூட்டத்தில் மேலும், பசளையை பெற்றுக்கொள்ள வங்கி கடன் வழங்குதல் தொடர்பாகவும், யூரியவின் சிறிய பகுதியாவது பெற்றுத் தருமாறும் கூறி விவசாயிகள் தந்களுடைய கோரிக்கையை முன் வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *