மாணவர்களுக்கு தேவையேற்படின் மூன்றாவது டோஸ் செலுத்தப்படும்!

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர், சுகாதாரப் பரிந்துரைகளுக்கமைய, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான மூன்றாவது டோஸ்தடுப்பூச்சியைச் செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்புச் செயலணியின் உறுப்பினரும் விசேட வைத்திய நிபுணருமான பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இன்று, வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் திங்கட்கிழமையன்று, மேலும் 6 இலட்சம் ஃபைசர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன என்றும் கோரப்பட்டிருந்த தடுப்பூசிகள் தொடர்ந்து கிடைப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்துக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தொற்றுக்கு இலக்காகும் நோயாளிகள் மற்றும் தற்போது கண்டறியப்படும் பிரதேசங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி, அவ்விடங்களைத் தனிமைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

கொரோனா ஒழிப்புக்காக சுகாதாரத் தரப்பினர் பின்பற்றிய வீட்டுத் தனிமைப்படுத்தல் வேலைத்திட்டமானது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட பாராட்டைப் பெற்றுள்ளது என, விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய இந்தக் கூட்டத்தின் போது அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *